15 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ராரோ கோனோ எதிர்வரும் ஜனவரி 4ஆம் நாள் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
வரும் ஜனவரி 4ஆம் நாள் கொழும்பு வரும், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ராரோ கோனோ, 6ஆம் நாள் வரை இங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன 2016ஆம் ஆண்டும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஏப்ரல் மாதமும், ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணங்களின் மூலம் ஏற்படுத்தப்பட்ட சிறிலங்கா- ஜப்பான் இடையிலான விரிவான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்து, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய, அனைத்துலக விவகாரங்கள் குறித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ராரோ கோனோ பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள முதலாவது அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.