ஆர்னோல்ட் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளரில்லை – தமிழ் அரசுக் கட்சி குத்துக்கரணம்
யாழ். மாநகர முதல்வர் பதவிக்கான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வடமாகாணசபை உறுப்பினர் இம்மானுவல் ஆர்னோல்ட் களமிறங்குவதாக வெளியான செய்திகளை தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் மறுத்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘யாழ். மாநகர முதல்வர் பதவிக்கான, தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளராக வடமாகாணசபை உறுப்பினர் இம்மானுவல் ஆர்னோல்ட் களமிறங்குவதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது.
உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன், தலைவர், துணைத்தலைவர்களை தெரிவு செய்வது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஏற்கனவே இணக்கம் கண்டுள்ளன.
எனவே, கூட்டமைப்பில் இடம்பெறும் கட்சிகளின் சார்பிலோ, வேட்பாளர்களின் சார்பிலோ உண்மைக்குப் புறம்பான் செய்திகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக, வடமாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து ஆர்னோல்ட் விலகியுள்ளதாகவும், அவர் யாழ். மாநகரசபைக்கான முதல்வர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ளதாலேயே மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார்.
அதேவேளை, உள்ளூராட்சி சபைகளின் தலைமைப் பதவிகள் தொடர்பாக தேர்தலுக்குப் பின்னரே முடிவெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், வட மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து ஆர்னோல்ட் விலகியுள்ளதால், அதற்கான காரணத்தை வெளியிட வேண்டியிருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.