உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டம் நிறைவேறியது
உள்ளூராட்சித் தேர்தல்கள் கட்டளைத் திருத்தச் சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல உறுப்பினர் வட்டாரங்களுக்கான நியமனங்கள் தொடர்பாக, தமிழ், சிங்கள வரைவுகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை களையும் வகையில், இந்த திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டது.
இந்த திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முறைப்படி விசாரிக்காமல் வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று கூட்டு எதிரணியும்,ஜேவிபியும் எதிர்ப்புத் தெரிவித்தன.
எனினும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு இந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவது அவசியம் என்று அரசதரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, திருத்தச்சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, 137 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 56 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை வாக்குகளால் இந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.