நெஸ்பி பிரபுவின் அறிக்கை பிரித்தானிய அரசின் நிலைப்பாடு அல்ல – தூதரகம் அறிக்கை
சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாக பிரித்தானிய பிரபுக்கள் சபையில், நெஸ்பி பிரபு வெளியிட்ட அறிக்கை, பிரித்தானியாவின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதம் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபு, போர்க்குற்ற அழுத்தங்களில் இருந்து சிறிலங்கா விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போல, இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்படவில்லை என்றும், 7000 தொடக்கம் 8000 வரையானோரே கொல்லப்பட்டனர் என்றும் அவர்களிலும் கால்வாசிப் பேர் விடுதலைப் புலிகளே என்றும் நெஸ்பி பிரபு கூறியிருந்தார்.
இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரபுக்கள் சபையில் நெஸ்பி பிரபு, பிரித்தானிய அரசின் சார்பில் உரையாற்றவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு தனது சொந்தக் கருத்தை வெளியிடும் உரிமை உள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் அதனை மீள் உறுதிப்படுத்தி நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானம் ஆகியவற்றின் போது, உண்மை கண்டறியும் குழுவை நியமிப்பது உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு நாங்கள் தொடர்ந்து ஊக்கமளிப்போம்.” என்றும் பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.