மேலும்

301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு – 40 சபைகளின் நிலை இன்னமும் இழுபறி

Srilanka-Electionஉள்ளூராட்சி சபைகள் தொடர்பான அரசிதழ் அறிவிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப் பெறப்பட்டதையடுத்து, மேலும் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழல் எழுந்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் எல்லைய நிர்ணயம் தொடர்பாக கடந்த பெப்ரவரி 17ஆம் நாள் வெளியிடப்பட்ட அரசிதழுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆறு வாக்காளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அந்த அரசிதழை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனால், 93 உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மனுதாரர்களுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, மனுக்களை விலக்கிக் கொள்ள இணங்கினர். நேற்று இந்த மனுக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, அரசிதழ் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏற்கனவே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 93 சபைகள் உள்ளிட்ட 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும்,  அரசிதழில் ஏற்பட்ட அச்சுப் பிழைகளால் 40 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாதுள்ளது.

திருத்தப்பட்ட அரசிதழ் வெளியிடப்பட்ட பின்னரே இந்த சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *