மத்தல விமான நிலையம் குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை – மகிந்த அமரவீர
மத்தல விமான நிலையம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
“ மத்தல விமான நிலையத்தில் தனியார் முதலீடுகள் தேவை என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கடுமையான இழப்புகளின் மத்தியிலேயே இந்த விமான நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இழப்புகளை ஈடுசெய்யவும், பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவும், அதனை முழுமையாக இயக்குவதற்கும் தனியார் முதலீடுகள் தேவை.
எனினும் விமான நிலையம் தொடர்பாக இன்னமும் இறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இது கூட்டு எதிரணிக்கும் நன்றாகவே தெரியும். இருந்தாலும், அவர்கள் அண்மையில் இந்திய நிறுவனத்துக்கு விமான நிலையத்தை விற்கப் போவதாக கூறி எதிர்ப்பு ஆர்பாட்டத்தை அம்பாந்தோட்டையில் நடத்தினார்கள்.
அவர்களின் போராட்டம் விமான நிலையத்துக்காக அல்ல. அது அம்பாந்தோட்டையின் அரசியலுக்காக நடத்தப்பட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.