நாமல் ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் கட்டுநாயக்கவில் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் செயலாளரான ஊர்நிலா இரேஷா சில்வா கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவினால் கறுப்புப் பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அவரது முன்னாள் செயலாளரான ஊர்நிலா இரேஷா சில்வாவை கைது செய்ய நீதிமன்ற அனுமதி கோரியிருந்தனர்.
வெளிநாட்டில் இருந்த அவர் விசாரணைகளுக்கு முன்னிலையாகாததால் நீதிமன்றம் அனைத்துலகப் பிடியாணை பிறப்பித்திருந்தது.
அனைத்துலக காவல்துறையின் உதவியுடன் அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அபுதாபி விமான நிலையம் வழியாக இன்று அதிகாலை 5 மணியளவில் ஊர்நிலா இரேஷா சில்வா கட்டுநாயக்க விமான நிலையம் வந்தார்.
அவரை குடிவரவு அதிகாரிகள் கைது செய்து நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளித்துள்ளனர்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிந்திய செய்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் செயலாளரான ஊர்நிலா இரேஷா சில்வா கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.