லலித் வீரதுங்க, அனுஷ பல்பிட்டவுக்குப் பிணை
சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று அனுமதி அளித்துள்ளார்.
2015 அதிபர் தேர்தல் காலத்தில், 600 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக கையாண்டு சில் துணிகளை விநியோகித்த குற்றச்சாட்டில், லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும், தண்டப்பணம் மற்றும் இழப்பீடு செலுத்த வேண்டும் என்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக இவர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவர்களின் பிணை மனு மீது இன்று விசாரணை இடம்பெற்றது, இதன் போது, 1 இலட்சம் ரூபா காசுப்பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா கொண்ட மூவரின் பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதி அளித்தார்“.
அதேவேளை இருவரினதும் கடவுச்சீட்டுகளை முடக்கி வைக்கவும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.