சியோலில் நடக்கும் பசுபிக் இராணுவத் தளபதிகள் மாநாட்டில் சிறிலங்கா இராணுவத் தளபதியும் பங்கேற்பு
தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும் இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்திய இராணுவத் தளபதிகளின் மாநாட்டில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தலைமையிலான உயர்மட்டக் குழு பங்கேற்றுள்ளது.
நான்கு நாட்கள் நடைபெறும் பசுபிக் இராணுவத் தளபதிகள் முகாமைத்துவ கருத்தரங்கு இன்று சியோலில் ஆரம்பமானது.
“ஒன்றுபட்ட முயற்சி- மரபு சாரா பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான தரைப்படையின் சிவில் இராணுவ ஒத்துழைப்பை கட்டியெழுப்புதல்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 29 நாடுகளின் இராணுவத் தளபதிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.
தென்கொரிய இராணுவத் தளபதி ஜெனரல் கிம் யொங் வூ மற்றும் அமெரிக்க இராணுவத் தளபதி மார்க் ஏ மில்லே ஆகியோர் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குகின்றனர்.
இன்றைய தொடக்க நாளில் முன்னாள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முக்கிய உரை நிகழ்த்தினார்.
இந்த மாநாட்டில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், மூத்த இராணுவ அதிகாரிகள் குழுவொன்றும் பங்கேற்றுள்ளது.