படையினர் எவரும் போர்க்குற்றம் புரியவில்லை – என்கிறார் சிறிலங்கா அமைச்சர்
முப்படைகள், காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எவருமே, எந்தவொரு போர்க்குற்றங்களையும் இழைக்கவில்லை என்று சிறிலங்காவின் வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திம்புலாகலவில், நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
“எமது போர் வீரர்கள் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்று சிலர் கூறுகின்றனர். அவர்கள் எவருமே அப்படியான குற்றங்களை புரியவில்லை.
விடுதலைப் புலிகள் மட்டும் தான் போர்க்குற்றங்களை இழைத்தார்கள். பாதுகாப்புப் படையினர், மூன்று பத்தாண்டுகால போரை முடித்து வைத்து, அமைதியை உருவாக்கினார்கள்.
போர்க்குற்றங்களுக்காக அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே தவிர, தாய்நாட்டை விடுவிப்பதற்காக சண்டையிட்ட போர் வீரர்களையல்ல.
எமது போர் வீரர்கள் எவரையும் கைது செய்வதற்து நல்லாட்சி அரசாங்கம் அனுமதிக்காது.
போர் வீரர்களை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தி மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லப் போவதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர், கூச்சலிடுகின்றனர். அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
அவர்களின் நோக்கம் போர் வீரர்களைப் பாதுகாப்பது அல்ல. மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாக்குகளைப் பெறுவதே அவர்களின் நோக்கம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.