‘சயுரால’ போர்க்கப்பலை இன்று கடற்படையில் இணைத்து வைக்கிறார் சிறிலங்கா அதிபர்
இந்தியாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்காக வாங்கப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று கடற்படையில் அதிகாரபூர்வமாக இணைத்து வைக்கவுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இன்று மாலை 4 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் ஒருவர், போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படையில் இணைத்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
66 மில்லியன் டொலர் செலவில், கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட, இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலே சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படும், முதலாவது புத்தம்புதிய போர்க்கப்பலாகும்.
2014ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்பாட்டுக்கு அமைய, ‘சயுரால’ உள்ளிட்ட இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் சிறிலங்கா கடற்படைக்காக வாங்கப்பட்டுள்ளன.
இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் பிரதான ஆயுதமாக, 76 மி.மீ பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பல்குழல் பீரங்கியைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிறிலங்கா கடற்படை மேற்கொண்டுள்ளது.