மேலும்

இந்தியத் தூதுவருடன் முதல்வர் விக்கி சந்திப்பு – புதிய அமைச்சர்களுக்கு மாத்திரம் அனுமதி

Taranjit-Singh-Sandhuஇந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து இன்று வடக்கிற்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.

அண்மையில் இந்தியத் தூதுவராக பொறுப்பேற்ற தரன்ஜித் சிங் சந்து, கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டதால், அந்தப் பயணம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல்முறையாக அவர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.

அவர் இன்று காலை 11.30 மணியளவில், முதலமைச்சரின் செயலகத்துக்கு வந்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் முதலமைச்சருடன், இன்று காலை பதவியேற்ற அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோருடன், வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முதலமைச்சரின் ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.

வட மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் இந்தச் சந்திப்புக்கு முதலமைச்சரால் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை பிற்பகல் 12.30 மணியளவில், இந்தியத் தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மேலும் பல்வேறு தரப்பினரையும் இந்தியத் தூதுவர் சந்திக்கவும், நிகழ்வுகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *