புதிதாக பல நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை விரிவுபடுத்தவுள்ளது சிறிலங்கா
வர்த்தக இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல நாடுகளுடன் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவிருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மல்வத்த பீடத்தின் மகாநாயக்கரான, திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரரை திங்கட்கிழமை சந்தித்து ஆசி பெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அனைத்துலக சமூகத்திடம் காணப்பட்ட சிறிலங்கா தொடர்பான, எதிர்மறையான கருத்துக்களை தற்போதைய அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில், மாற்றியமைத்திருக்கிறது.
சில தூதுவர்கள் நாட்டுக்கு சாதகமான பெயரை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் திறமையுடன் செயற்படவில்லை. தமது கடமைகளைச் சரியாகச் செய்யத் தவறிய பல தூதுவர்களை அரசாங்கம் திருப்பி அழைக்கவுள்ளது.
தேவையில்லாத இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தூதரகங்கள் சிலவற்றை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை, வர்த்தக இராஜதந்திரத்தை விரிவுபடுத்தும் வகையில், பல நாடுகளுடன் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.