தேவைகள், முன்னுரிமைகளுக்கு அமையவே அமைச்சர்களின் நியமனம் – முதலமைச்சர்
வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் நியமனம் போருக்குப் பின்னரான, தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாகவே இடம்பெறும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சராக இம்மானுவல் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது உண்மையா என்று ஊடகவியலாளர் ஒருவர் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு அவர், “அவ்வாறான செய்தியில் உண்மையில்லை. இன்னமும் அமைச்சர்களாக யாரை நியமிப்பது என்று நான் முடிவு செய்யவில்லை. முதலமைச்சரே அமைச்சர்களை நியமிக்க முடியும்.
அமைச்சர்களின் நியமனங்கள், போருக்குப் பின்னரான, தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாகவும், உரிய செயல்முறைகள், மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாகவும், உரிய நேரத்தில் இடம்பெறும்.
பதவி விலகிய அமைச்சர்கள் இருவரினதுமும், பொறுப்புகளை நானே கவனித்து வருகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் பதவிக்கு, மாகாணசபை உறுப்பினர் இம்மானுவல் ஆர்னோல்ட்டை நியமிக்குமாறு, தமிழ் அரசுக் கட்சி நேற்று முதலமைச்சருக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.