இந்தியக் கடற்படையின் டோனியர் விமானங்கள் பயிற்சியை முடித்து திரும்பின
சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையினருக்குப் பயிற்சிகளை அளிப்பதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்த இந்தியக் கடற்படையின் டோனியர் விமானங்கள், பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளன.
சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையினருக்குப் பயிற்சி அளிப்பதற்காக, இந்தியக் கடற்படையின் இரண்டு டோனியர் கண்காணிப்பு விமானங்கள் கடந்த 19ஆம் நாள், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தன.
இந்த விமானங்கள், சிறிலங்காவின் சிறப்பு பொருளாதார வலயத்துக்கு உட்பட்ட மேற்கு மற்றும் தென்மேற்கு கடற்பகுதியில், சிறிலங்கா படையினருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டிருந்தன.
சிறிலங்கா கடற்படையின் ஏழு வான் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறிலங்கா விமானப்படையின் கண்காணிப்பாளர்களுக்கு டோனியர் விமானத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்தப் பயிற்சிகள் நேற்றுமுன்தினம் நிறைவடைந்ததை அடுத்து, இந்திய கடற்படை விமானங்கள் திரும்பிச் சென்றுள்ளன.
சிறிலங்காவில் இந்தியக் கடற்படையின் டோனியர் விமானங்கள் பயிற்சிகளை அளிப்பதற்காக வந்திருந்தமை இதுவே முதல்முறையாகும்.