11 தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்கில் மற்றொரு சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த வழக்கில் 5 சிறிலங்கா கடற்படையினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தங்காலை ருகுணு கடற்படை முகாமில் பணியாற்றிய மற்றொரு கடற்படைச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் காலை 10 மணியளவில், குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான, குறித்த கடற்படைச் சிப்பாயிடம், இரவு 8 மணி வரையாக – சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்தே அவர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.