மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார் ஞானசார தேரர்
கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மறைந்திருந்த பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று வெளியே வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வெறுப்புணர்வைத் தூண்டும் பரப்புரைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரரரைக் கைது செய்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கடந்த மாத பிற்பகுதியில் இருந்து அவர் மறைந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், இரண்டு வழக்குகளில் முன்னிலையாகாத ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தினால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.
ஞானசார தேரரை கூட்டு எதிரணியினரே மறைத்து வைத்திருப்பதாக, அரச தரப்பினரும், அமைச்சர் விஜேதாச ராஜபக்சவே மறைத்து வைத்திருப்பதாக மற்றொரு தரப்பினரும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்த ஞானசார தேரர் இன்று காலை கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்துச் செய்த நீதிவான், பிணையில் செல்லவும் அனுமதி அளித்தார்.
அதேவேளை, வெறுப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டதாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் ஞானசார தேரர், திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
இதையடுத்து அவரிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.