முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றச்சாட்டுக்கு உள்ளான, வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்தே, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு முதலமைச்சர் அறிவித்ததை அடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது குறித்து, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சி ஒன்றின் தலைமையகத்தில் இன்று மாலை கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 20 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நாளை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
வட மாகாண முதல்வராக , தற்போதைய அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்தின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் வடக்கு மாகாண அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
21 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுநர் ரெஜினோல் குரேயிடம் கையளிப்பு #lka