இந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு வரவுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள்
இந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் பலர் பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர் என்று, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 35 ஆவது கூட்டத்தொடரில், நேற்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோவின் அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க,
சிறிலங்காவின் தற்போது முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயல்முறைகளின் ஒரு கட்டமாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத முறியடிப்பில், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை ஊக்குவிக்கும், மற்றும் பாதுகாக்கும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் வரும் ஜூலை மாதம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் சிறப்பு அறிக்கையாளர், எதேச்சாதிகாரமாக தடுத்து வைத்தல் தொடர்பான பணிக்குழு ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார்.