வெள்ளை மாளிகை அதிகாரிகளை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா பிரதமர்
அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் இருவரை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பிரதிநிதிகளான இரு வெள்ளை மாளிகை அதிகாரிகளையே சிறிலங்கா பிரதமர் சந்திக்கவுள்ளார்.
ஐ.நா சமுத்திரங்கள் கருத்தரங்கு இன்று நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
இதன் பின்னர், வெள்ளை மாளிகை அதிகாரிகளுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்கூட்டியே நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
மருத்துவ பரிசோதனைகள் முன்கூட்டியே முடிவடைந்துள்ளதால், அவர், முன்கூட்டியே நாடு திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் 7 அல்லது 8ஆம் நாள் அவர் நாடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.