பளை துப்பாக்கிச் சூடு – உரும்பிராய் இளைஞன் சந்தேகத்தில் கைது
பளை- கச்சார்வெளிப் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக உரும்பிராயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருபானந்தமூர்த்தி விஜயரூபன் என்ற 29 வயதுடைய சந்தேக நபரே, உரும்பிராயில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 19ஆம் நாள் அதிகாலையில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா காவல்துறையின் வாகனம் மீது பளை- கச்சார்வெளிப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இதன்போது, காவல்துறையினருக்கோ, காவல்துறை வாகனத்துக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை. தொடருந்து சமிக்ஞைக் கருவித் தொகுதி மீது துப்பாக்கிச் சூடு பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து, சிறிலங்கா இராணுவம், காவல்துறை என்பன குவிக்கப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம், உரும்பராயைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் சந்தேகத்தின் பேர் கைது செய்துள்ளனர்.