உலங்குவானூர்திகளுக்கான உதிரிப்பாகங்களை சிறிலங்காவுக்கு வழங்கியது இந்தியா
சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகளுக்குத் தேவையான அவசர உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை விநியோகித்திருப்பதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா விமானப்படை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தப் பணிகளில் சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ-17 மற்றும் பெல் உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக சேவையாற்றி வருவதால் உலங்குவானூர்திகள் பலவற்றில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்திய விமானப்படையிடம் விடுக்கப்படட அவசர உதவிக் கோரிக்கையை அடுத்து, சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகளுக்குத் தேவையான அவசர உதிரிப்பாகங்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படை விமானம் ஒன்று நேற்று முன்தினம் மாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தது.
எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளுக்கான உதிரிப்பாகங்களே இதில் எடுத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் இந்திய விமானப்படை சில எம்.ஐ -17 உலங்குவானூர்திகளை சிறிலங்காவுக்கு வழங்கியிருந்தது என்று நிதின் கோகலே என்ற இந்திய ஊடகவியலாளர் தனது நூலில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.