போர்க்குற்றவாளிகளில் ஒருவரான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன கைது
வெலிவேரிய- ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தன இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் நாள், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்களில் 3 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 33 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த சிறிலங்கா காவல்துறையினர், மூன்று இராணுவ அதிகாரிகளைக் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் குணவர்த்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரை கம்பகா நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்டப் போரில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது டிவிசனின் முதலாவது பிரிகேட்டுக்கு (58-1) லெப்.கேணல் தேசப்பிரிய குணவர்த்தனவே கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.
இந்தப் படைப்பிரிவு இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.