16 மாதங்களாக வறுமைக்கோட்டுக்குள் இருக்கும் யாழ்., முல்லை., அம்பாறை மாவட்டங்கள்
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் சிறிலங்காவில் வறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் தொடர்ச்சியாக 16 மாதங்களாக இடம்பெற்றுள்ளன.
சிறிலங்காவின் சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால், மாதம் தோறும், தனிநபர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு 2016 ஜனவரி மாதம் தொடக்கம் வறுமைநிலை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
இதன்படி, கடந்த 16 மாதங்களாக, சிறிலங்காவிலுள்ள 25 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் வறுமைக்கோட்டுக்குள் இருந்து வருகின்றன. இது மொத்த சனத்தொகையில் 58 வீதமாகும்.
கடந்த மார்ச் மாத வறுமைக்கோட்டு எல்லையாக- மாதாந்த தனிநபர் வருமானம் 4,244 ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்குக் கீழ் தனி நபர் வருமானத்தைக் கொண்டவையாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பாறை, குருநாகல, புத்தளம், அனுராதபுர, பொலன்னறுவ, பதுளை, மொனராகல, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
யாழ். மாவட்டத்தின் மாதாந்த தனிநபர் வருமானம் 4,184 ரூபா எனவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தனிநபர் வருமானம் 4,197 ரூபா எனவும், அம்பாறை மாவட்டத்தின் தனி நபர் வருமானம் 4,211 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டம் 4,244 ரூபா தனிநபர் வருமானத்துடன் வறுமைக்கோட்டு எல்லையில் உள்ளது.
அதேவேளை, வறுமை நிலைக்கு அப்பாலுள்ள 10 மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தனிநபர் வருமானம் 4,411 ரூபாவாக உள்ளது.
அதேவேளை, மன்னாரில் 4,383 ரூபா,வவுனியாவில் 4,337 ரூபா, கிளிநொச்சியில் 4,303 ரூபா, மட்டக்களப்பில் 4,296 ரூபா என மாதாந்த தனிநபர் வருமானம் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.