மோடியின் சிறிலங்கா பயணம் – புலனாய்வு அமைப்புகள் விழிப்பு நிலையில்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தை முன்னிட்டு, புலனாய்வு அமைப்புகள் உச்ச விழிப்பு நிலையில் செயற்படுவதாக கொழும்பு ஆங்கிய வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் மே 12ஆம் நாள் கொழும்பில் ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
இதனை முன்னிட்டு இந்திய, பாதுகாப்பு முகவர் அமைப்புகள், சிறிலங்காவுடன் நெருக்கமாக இணைந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டத்தைக் குழப்பும் வகையில், கொழும்பில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை கூட்டு எதிரணியினர் நடத்தக் கூடும் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்த நிலையில், இந்தியப் பிரதமரின் பயணத் திட்டத்தைக் குழப்பும் வகையிலான போராட்டங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், மோடியின் பயணத்துக்கு முன்னதாக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.