குப்பை மேடு சரிவினால் உயிரிழந்தோர் 30 ஆக அதிகரிப்பு – 30 பேரைக் காணவில்லை
கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் கடந்த வெள்ளிக்கிழமை குப்பைமேடு சரிந்து விழுந்ததில் மரணமானோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த அனர்த்தத்தினால், 228 குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளை, அடுத்த சில நாட்களில் கடுமையான மழை பெய்தால், குப்பை மேடு மீண்டும் ஒருமுறை சரிந்து விழும் அபாயம் இருப்பதாக அப்பகுதியை ஆய்வு செய்த புவியியல் துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.