வியட்னாம் பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்புகிறார் ரணில்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பத் தீர்மானித்துள்ளார்.
தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான், வியட்னாம் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
ஜப்பானிய பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று வியட்னாமுக்கான பயணத்தை ஆரம்பித்தார்.
வியட்னாம் சென்றடைந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஹனோய் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த விபத்தில், 26 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையில், சிறிலங்கா பிரதமர் தமது பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
நாளை மறுநாள்- ஏப்ரல் 19ஆம் நாளே நாடு திரும்புவதற்கு சிறிலங்கா பிரதமர் திட்டமிட்டிருந்தார். எனினும் முன்கூட்டியே அவர் கொழும்பு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.