மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்குள் 100 பேர் புதையுண்டனர்?
கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் கடந்த வெள்ளிக்கிழமை 300 அடி உயரமான குப்பைமேடு வீடுகளுக்கு மேல் சரிந்து வீழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இந்த விபத்தில் 100 பேர் வரையில் தமது வீடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று இரவு இடைநிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள் இன்று காலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளில் சிறிலங்கா இராணுவம், சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்டவற்றை சேர்ந்த 100 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் குப்பைக்குள் புதைந்து போனவர்கள் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய சரியான எண்ணிக்கையை உறுதி செய்வதில் அதிகாரிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் 80 வீடுகள் முற்றாகவே குப்பை மேட்டுக்குள் புதைந்துள்ளன. மேலும் 36 வீடுகள் பலத்த சேதமடைந்தன.
இதனிடையே, மீதொட்டமுல்லவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் இன்னும் 72 மணித்தியாலங்களில் முடிவடையும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
குப்பை மேட்டில் இன்னொரு சரிவு இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், சிறப்பு நிபுணர்கள் குழுவொன்று அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் 30இற்கு மேற்பட்ட அகழ்வு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.