அம்பாந்தோட்டை இழுபறிக்கு சிறிலங்காவே காரணம் – மலிக் சமரவிக்கிரம
சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு சிறிலங்கா அரச தரப்பே காரணம் என்று, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
”அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடனான உடன்பாட்டை இந்த மாத இறுதிக்குள் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் விரும்புகிறது.
எமது தரப்பில் தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. எமது பக்கத்தில் தான் பந்து இருக்கிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்வதற்காக சீனாவிடம் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை.
இதுபற்றி சிறிலங்கா அரசாங்கத்துடன் சீனா பேச்சு நடத்தக் கூட இல்லை. எமது பதிலுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும்.
வரும் 16ஆம் நாள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய பின்னர், எந்தளவு குத்தகைக் காலத்துக்கு இணங்கலாம் என்று நாம் முடிவு செய்ய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.