ஜப்பானில் சிறிலங்கா பிரதமர்- இன்று பேச்சுக்களை ஆரம்பிக்கிறார்
ஒரு வாரகாலப் பயணத்தை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளார்.
2015ஆம் ஆண்டு சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாக நேற்று ஜப்பான் சென்றடைந்தார்.
நரிடா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்த சிறிலங்கா பிரதமரை, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் சிறப்பு ஆலோசகர் ஹிரோரோ இசுமி, சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா ஆகியோர் வரவேற்றனர்.
இன்று தொடக்கம் ஜப்பானிய அரச மற்றும் தனியார் துறை பிரமுகர்களை சிழறிலங்கா பிரதமர் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயுடன் அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளார். அத்துடன் சிறிலங்கா பிரதமருக்கு ஜப்பானிய பிரதமர் இராப்போசன விருந்தும் அளிக்கவுள்ளார்.