காங்கேசன்துறையில் தொடங்கிய சிறிலங்கா இராணுவத்தின் பாரிய களப்பயிற்சி சூரியவெவவில் நிறைவு
மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காகச் செல்லவுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் காங்கேசன்துறையில் ஆரம்பித்த பாரிய களப் பயிற்சி ஒத்திகை சூரியவெவவில் நேற்று முடிவுக்கு வந்தது.
மாலியில் ஐ.நா அமைதிப்படையின் வாகனத் தொடரணிக்கான பாதுகாப்பில் ஈடுபடவுள்ள சிறிலங்கா இராணுவ அணி மார்ச் 21ஆம் நாள் காங்கேசன்துறையில் இந்த களப்பயிற்சியை ஆரம்பித்தது. இந்த 9 நாள் களப்பயிற்சி சுமார் 1000 கி.மீ தூரப் பயணத்தின் பின்னர் நேற்றுமாலை அம்பாந்தோட்டை சூரியவெவவில் நிறைவடைந்தது.
வெள்ளை நிறம்பூசப்பட்ட, நீலக் கொடி பறக்கவிடப்பட்ட நிலையில்- ஐ.நாவின் வாகன அணியைப் பிரதிபலிக்கும் வகையில், விநியோக வாகனங்கள், கவசவாகனங்களை உள்ளடக்கியதாக இந்த பாரிய இராணுவ வாகனத் தொடரணி இடம்பெற்றிருந்தது.
இந்த ஒன்பது நாள் களப்பயிற்சியில் இராணுவ வாகனத் தொடரணிகள் மாலியில் எதிர்கொள்ளும் பாதுகாப்பு நெருக்கடிகள் தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டிருந்தன.
அடுத்த மாதம் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 200 படையினர் மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து கொள்வதற்காக அனுப்பப்படவுள்ளனர்.