முள்ளிக்குளத்தில் போராட்டம் நடத்தும் மக்களுடன் அனைத்துலக மன்னிப்பு சபை செயலர் சந்திப்பு
முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் அப்பகுதி மக்களை அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம், சலில் ஷெட்டி நேற்று சந்தித்துப் பேசினார்.
முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை சிறிலங்கா கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக நேற்று 12 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் நேற்றுக்காலை 10.30 மணியளவில் அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி உள்ளிட்ட குழுவினர் முள்ளிக்குளம் பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தனர்.
தமது நிலம் மீட்கப்படும் வரை தாம் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக, அனைத்துலக மன்னிப்புச் சபை பிரதிநிதிகளிடம் மக்கள் தெரிவித்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி,
‘முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமது நிலங்களை மீட்பதற்காக நீண்ட நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருவதை அறிந்தோம்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை சந்திப்பதற்காக அனைத்துலக மன்னிப்புச் சபையின் சார்பாக நாங்கள் இங்கு வந்தோம்.
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக முறைப்பாடு கிடைக்கின்றது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது நிலங்களை இழந்து தவிக்கின்றனர். குறித்த மக்களின் போராட்டம் முக்கியமானது.
நாங்கள் பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளோம்.இதன் போது குறித்த மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் உயர் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.