சிறிலங்காவுக்கு 3000 மெட்றிக் தொன் அரிசியுடன் 3 கப்பல்களை அனுப்பியது பாகிஸ்தான்
வரட்சியால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ள 3000 மெட்றிக் தொன் அரிசியை ஏற்றிக் கொண்டு மூன்று கப்பல்கள் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளன. சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் வரட்சியால் பாதி்க்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசியை அனுப்பி வைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் அறிவித்திருந்தார்.
2017 பெப்ரவரி மாதம் 25 மெட்றிக் தொன் அரிசி பாகிஸ்தான் விமானப்படை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பின்னர், மேலும் மூன்று விமானங்களில் பாகிஸ்தான் அரிசியை அனுப்பியிருந்தது.
இதையடுத்தே மூன்று கப்பல்களில் 3000 மெட்றிக் தொன் அரிசியை பாகிஸ்தான் அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கப்பல்கள் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் கொழும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றை பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் சையிட் சகீல் ஹுசேன், சிறிலங்கா பிரதமரிடம் கையளிப்பார்.
எஞ்சிய 7000 மெட்றிக் தொன் அரிசி, ஏப்ரல் மாத முடிவுக்குள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போதெல்லாம் பாகிஸ்தான் உதவிகளை வழங்கி வந்துள்ளது. சிறிலங்காவுடன் வலுவான இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ள பாகிஸ்தான், அதனை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் தெரிவித்துள்ளார்.