மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் முக்கிய பதவி
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொதுஉதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் 28 ஆவது பொது உதவி அதிகாரியாக அவர் நேற்று பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதிக்கு உதவியாக நிர்வாகப் பணிகளை இவர் ஆற்றுவார்.
இதற்கு முன்னர் இவர் சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைக்காக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுப்பது தொடர்பாக அடுத்த ஏப்ரல் 27ஆம் நாள் தீர்மானிக்கவுள்ள நிலையில், அவர் இந்தப் புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இறுதிக்கட்டப் போரில், சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையிலும், சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் முக்கிய பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.