போரின் போர்வையில் நடந்த பொதுமக்களின் கொலைகளை பொறுத்துக்கொள்ள முடியாது – சந்திரிகா
போரில் ஈடுபட்ட போர்வையில், அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த எவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் பொறிமுறை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பலாலியில் உள்ள யாழ்ப்பாண படைகளின் தலைமையகத்தில் கடந்த மார்ச் 25ஆம் நாள், மாலையில் சிறிலங்கா படை அதிகாரிகள், மற்றும் படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய அமைதி மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக சிறிலங்கா படை அதிகாரிகள் மற்றும் படையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் டிவிசன்கள், பிரிகேட்கள். பற்றாலியன்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இங்கு உரையாற்றிய சந்திரிகா குமாரதுங்க, பொறுப்புக்கூறல் வழிமுறையானது, மோதல்களில் ஈடுபட்ட இரண்டு தரப்பினருக்கும் நியாயமானதாக இருக்கும். போரின் போர்வையில் நடந்த பொதுமக்களின் கொலைகளை பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும் குறிப்பிட்டார்.