எந்தவொரு படையினரையும் தண்டிக்கமாட்டோம் – சந்திரிகா
தமது உறவுகள் காணாமல்போக காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு அவர்களின் உறவினர்கள் கோரவில்லை, எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற கேள்விக்கான பதிலையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பாக செயல்திறன் மிக்க தீர்வொன்றை முன்வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மக்களுக்கும் அனைத்துலகத்துக்கும் வாக்குறுதி அளித்துள்ளது. எனினும் இவற்றை செய்வது இலகுவான காரியமாக இருக்கவில்லை.
வரலாற்றில் முதல் தடவையாக, முன்னாள் அதிபர் ஒருவர் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி நாட்டின் ஒற்றுமையை குழப்பிக் கொண்டிருக்கிறார்.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைப் பாதுகாத்த எந்தவொரு இராணுவ வீரரையும் நாம் குற்றவாளியாக தண்டிக்கப் போவதில்லை.
நாட்டில் போர் நடந்த போது நாட்டில் இருக்காமல் வெளிநாடுகளில் வாழ்ந்த புலம்பெயர் மக்கள் கூறுவது போன்று நாம் எதனையும் செய்ய முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.