சிறிலங்காவுக்கு ரஷ்யாவின் ஜிபாட் 3.9 போர்க்கப்பல்கள் – இறுதிக்கட்டத்தில் பேச்சுக்கள்
சிறிலங்காவுக்கு ஜிபாட் 3.9 (Gepard 3.9) ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை வழங்குவது தொடர்பான உடன்பாடு குறித்த பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மலேசியாவின் லங்காவி நகரில் நடந்து வரும் லிமா-2017 எனப்படும், அனைத்துலக கடல்சார் மற்றும் விமான கண்காட்சியில் பங்கேற்றுள்ள, இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்யாவின் சமஷ்டி சேவை பிரதித் தலைவர் மிகெய்ல் பெருக்கோவ், ரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக்கிற்கு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா தரப்புடன் இணைந்து வரைவு உடன்பாடு தயாரிக்கப்பட்டுள்ளது. சில தொழில்நுட்ப விபரங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் மாத்திரம் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்று, மிகெய்ல் பெருக்கோவ் தெரிவித்துள்ளார்.
ஜிபாட் 3.9 போர்க்கப்பல்கள், போர்க்காலத்தில், எதிரிகளின் விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிகளை எதிர்த்துப் போரிடக் கூடியவை. பாதுகாப்பு வழங்கல் ,ரோந்துக் கடமைகள், தரையிறக்க நடவடிக்கைக்கான சூட்டாதரவு, கண்ணிவெடிகளை விதைத்தல் போன்றவற்றில் இந்தக் கப்பல்களை ஈடுபடுத்த முடியும்.
வியட்னாமுக்கு இரண்டு ஜிபாட் 3.9 போர்க்கப்பல்களை 2011ஆம் ஆண்டு ரஷ்யா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.