ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை வழி நடத்திய மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண
சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் கீழ் செயற்பட்ட சிறப்புக் குழுவொன்றே, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னணியில் இருந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போதே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளிப்படுத்தினர்.
லசந்த விக்கிரமதுங்க துப்பாக்கிச் சூட்டினால் மாத்திரம் மரணமடையவில்லை என்றும், அவர் தலையில் கூரிய பொருள் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தார் என்றும் அதன் பகுதி ஒன்று லசந்த விக்கிரமதுங்கவின் மூளையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தனர்.
அத்துடன், முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, ஊடகவியலாளர்களைத் தாக்குவதற்கான சிறப்புக் குழு ஒன்றை இயக்கி வந்தார் என்றும், ஊடகவியலாளர்கள் கீத் நொயார், உபாலி தென்னக்கோன் போன்றவர்களை இந்தக் குழுவினரே தாக்கியுள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.