வரட்சியின் விளைவு – இரட்டிப்பானது சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதி
சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மோசமான வரட்சியின் காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதையடுத்தே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
40 ஆண்டுகளில் மோசமான வரட்சியை சிறிலங்கா சந்தித்துள்ளது. இதனால் சிறிலங்காவின் ஆண்டு மின் உற்பததியில், 35 வீதப் பங்கை வகித்து வந்த நீர்மின் உற்பத்தி, 2016ஆம் ஆண்டில், 11 வீதமாக குறைந்துள்ளது.
இதனால், மின் உற்பத்தி நிலையங்களின் தேவைக்காக எண்ணெய் மற்றும் டீசலின் நுகர்வு அதிகரித்துள்ளது.
டிசெம்பர் மாதத்தை விட, 260,750 பீப்பாய் டீசலும், 260,000 பீப்பாய் எண்ணெய் எரிபொருளும் ஜனவரி மாதத்தில் மேலதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாள் ஒன்றுக்கு 26000 தொடக்கம் 32,000 பீப்பாய்கள் வரையான டீசலையும், 6,000 தொடக்கம், 10,000 பீப்பாய் வரையான எண்ணெயையும் இறக்குமதி செய்வது வழக்கமாகும்.
சிறிலங்கா மின்சார சபையின் பயன்பாட்டுக்காகவே அதிகளவு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.