சிறிலங்கா அரசின் வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது
வவுனியாவில் நான்கு நாட்களாக, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நடத்தப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம், சிறிலங்கா அரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து இன்று மாலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
வவுனியாவில் நான்கு நாட்களாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 14 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக பரவலான போராட்டங்கள் இடம்பெறத் தொடங்கியிருந்தன.
இந்த நிலையில், இன்று மாலை சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்துக்குச் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சு நடத்தினார்.
இதன் போது, அடுத்தமாதம் 9ஆம் நாள் அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமருடனான பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஒழுங்கு செய்வதாக ருவான் விஜேவர்த்தன வாக்குறுதி அளித்தார்.
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 10 பேர் இந்த பேச்சுக்களில் பங்கேற்று, பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வு காண முடியும் என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், எழுத்துமூல உறுதிமொழியை அளித்ததை அடுத்து, இன்று மாலை உண்ணாவிரதப் போராடடம் கைவிடப்பட்டது.