இத்தாலிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நாளை கொழும்பு வருகிறது
இத்தாலிய கடற்படையின் பலநோக்கு ஐரோப்பிய போர்க்கப்பலான ITS Carabiniere நான்கு நாட்கள் பயணமாக நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது.
லா ஸ்பெசியா துறைமுகத்தில் இருந்து கடந்த டிசெம்பர் 20ஆம் நாள், நான்கு மாதப் பயணத்தை ஆரம்பித்த இந்தப் போர்க்கப்பல், பாகிஸ்தானில் தரித்திருந்த நிலையில், இரண்டாவதாக கொழும்புத் துறைமுகம் வரவுள்ளது.
நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான, ITS Carabiniere, 2015 ஏப்ரலில் இத்தாலியக் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
பிந்திய தலைமுறை போர்த்தளபாடங்களும், இராணுவ கருவிகளும் இந்தப் போர்க்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
கடல் கடந்த பிராந்திய நாடுகளுடன், முக்கியமான பங்காளர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும், திட்டத்தின் அடிப்படையிலேயே இத்தாலியப் போர்க்கப்பல் கொழும்பு வரவுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு, கண்காணிப்பு, ஒத்துழைப்பை வலுப்படுத்தல், மற்றும் கடற்படை இராஜதந்திரம் ஆகியவற்றை வலுப்படுத்துவதே, இந்தப் போர்க்கப்பலின் அடிப்படைச் செயற்பாடாகும்.
வரும் 14ஆம் நாள் வரை கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து இத்தாலியப் போர்க்கப்பலின் மாலுமிகள் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.