ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க உலகத் தலைவர்களுக்கு சிறிலங்கா அழைப்பு
அடுத்த ஆண்டு ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்கள் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்புகளை விடுத்துள்ளது.
இந்த தகவலை சிறிலங்காவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு சிறிலங்காவில் நடத்தப்படவுள்ள ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளைக் கண்காணிக்கும் செயலகம் ஒன்று நேற்று கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.
இந்தச் செயலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ‘ஐ.நா வெசாக் நாள் முதல் முறையாக சிறிலங்காவில் கொண்டாடப்படவுள்ளது.
இதன் பிரதான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில், வரும் 2017 மே 12ஆம் நாள் நடைபெறும்.
100 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மறுநாள் தலதா மாளிகையில் அனைத்துலக பௌத்த கருத்தரங்கு இடம்பெறும். அன்றிரவு சிறப்பு தலதா பெரஹெர இடம்பெறும்.
ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புதிய ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், ஆகியோரும் அழைக்கப்பட்ட தலைவர்களில் அடங்கியுள்ளனர்.
தாய்லாந்து பிரதமர் ஏற்கனவே தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.