அமெரிக்காவின் முடிவினால் சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு
அடுத்த ஆண்டு அமெரிக்கா எடுக்கவுள்ள பொருளாதார முடிவுகளினால் சிறிலங்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சம்பிக்க ரணவக்க, அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் றிசேவ் சிஸ்டம் அடுத்த ஆண்டு வட்டி வீதங்களை அதிகரிக்கவுள்ளது.
கடந்த ஆண்டு டிசெம்பரில் இதுபோன்று வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டதால், 2400 மில்லியன் டொலர் முதலீடுகள் சிறிலங்காவில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
அமெரிக்காவில் வட்டி வீதம் மீண்டும் உயர்த்தப்பட்டால், சிறிலங்கா ரூபாவின் மதிப்பின் மீது அது அழுத்தங்களைக் கொடுக்கும்.
இதனால் நாம் குறிப்பிட்ட காலத்துக்கு பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இதனால் நாம் கவனமாகச் செயற்பட வேண்டும்.
மசகு எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. இதுவும் கூட சிறிலங்காவின் பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் பெடரல் றிசேவ் சிஸ்டம், வட்டி வீதத்தை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மேலும் மூன்று தடவைகள் வட்டி வீதத்தை அதிகரிக்கவும் எதிர்பார்த்துள்ளது.