அமெரிக்காவுக்குப் பறந்தார் பசில் ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளர் தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சைக்காக மூன்று மாதங்கள் அமெரிக்கா செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்தவாரம் பசில் ராஜபக்சவுக்கு அனுமதி அளித்திருந்தது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பசில் ராஜபக்ச, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை பெறுவதற்கு அமெரிக்கா செல்வதற்கு 3 மாதங்கள் அனுமதிக்க வேண்டும் என்று பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், பசில் ராஜபக்சவின் குடும்பத்தினர் அமெரிக்காவில் தங்கியுள்ள நிலையில், அவர்களைப் பார்க்கவே, அங்கு சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்சவின் மகளுக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.