சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் உபய மெடவெல ஓய்வுபெற்றார்
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெடவெல நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் கவசப்படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான மேஜர் ஜெனரல் உபய மெடவெலவுக்கு, கொழும்பு றொக்ஹவுசில் உள்ள கவசப்படைப்பிரிவுத் தலைமையகத்தில் நேற்று பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இரண்டாவது, மூன்றாவது கட்ட ஈழப்போர்களின் போது, வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில், சிறிலங்கா இராணுவத்தின் கவசப்படைப்பிரிவின் அணிகளுக்கு இவர் தலைமை தாங்கியவர்.
இராணுவப் பேச்சாளராகவும் முன்னர் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெடவெல, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தில் ஒரு ஆண்டு காலம் இராணுவ ஆலோசகராக கடமையாற்றியிருந்தார்.
கடந்த ஒக்ரோபர் மாத இறுதியில் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் உபய மெடவெல, சுமார் ஒரு மாத காலமே இந்தப் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.