மகிந்தவின் ஆலோசகராக 10 ஆண்டுகள் பணியாற்றிய வாசுதேவவின் மனைவி
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தனது மனைவி, அதிபர் செயலகத்தில் ஆலோசகராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார் என்பதை, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஒப்புக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் உரையாற்றிய ஐதேக உறுப்பினர் நளின் பண்டார ஜெயமகா,
“கொலைகள், ஊழல்கள், மோசடிகளில் ஈடுபட்ட முன்னைய அரசாங்கத்தில், அமைச்சராக இருந்தவர் வாசுதேவ நாணயக்கார.
அவரது மனைவி, ராஜபக்ச அரசாங்கத்தில் அதிபர் செயலகத்தில் இருந்து பத்து ஆண்டுகள் சம்பளத்தையும், வாகனத்தையும் பெற்றவர். இப்போது, அவர் கதாநாயகன் போலப் பேசுகிறார்” என்று குற்றம்சாட்டினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய வாசுதேவ நாணயக்கார, அதிபர் செயலகத்தில் தனது மனைவி 10 ஆண்டுகள் ஆலோசகராக இருந்தார் என்பதை ஒப்புக்கொண்டார்.
அந்தப் பதவிக்குத் தேவையான தகைமைகளை தனது மனைவி கொண்டிருந்தார் என்றும் அவர் நியாயப்படுத்தினார்.