மகிந்தவின் சீனப் பயணத்துக்கு தேவையான உதவிகளை வழங்க சிறிலங்கா பிரதமர் உத்தரவு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் நாள், சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஒருவார காலப் பயணமாக சீனா செல்லும் அவர், டிசெம்பர் 1ஆம் நாள் வரை பீஜிங்கில் தங்கியிருப்பார். இதன் போது அவர் சீன அரசின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
சீன அரசின் அழைப்பின் பேரில் இடம்பெறும் பயணம் என்பதால், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் என்ற வகையில் தமது பயணத்துக்கான வசதிகள், ஏற்பாடுகளைச் செய்து தருமாறு, சிறிலங்கா பிரதமரிடம் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணத்துக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.