மேலும்

ஆவா குழு வேட்டையில் சிறிலங்கா படைச் சிப்பாயும் சிக்கினார்

sri-lanka-armyயாழ்ப்பாணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக, ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் எட்டுப் பேர் வரையில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களில், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டதான தகவலை, இராணுவம் மறுத்துள்ளது.

ஆனால், ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தற்போதும் இராணுவ சேவையில் இருப்பவர் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, கைது செய்யப்பட்ட இராணுவத்தைச் சேர்ந்த நபர் ஒரு தமிழர் என்றும், இவர் பொறியியல் படைப்பிரிவில் பணியாற்றுபவர் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இதனிடையே, ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகரான சில்லாலையைச் சேர்ந்த அலெக்ஸ் அரவிந்தனும் அடங்கியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பணியகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அலெக்ஸ் அரவிந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர செயற்பாட்டாளர் என்றும், எழுக தமிழ் நிகழ்வை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இவரது கைதைக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இது எழுக தமிழ் எழுச்சியை ஒடுக்கும் சிறிலங்கா அரசின் முயற்சி என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *