லசந்த கொலையில் சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரி பிணையில் விடுவிப்பு
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில், முக்கிய சந்தேக நபரான இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம், ரிவிர நாளிதழின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கிலும் தொடர்புபட்டவராவார்.
தாக்கப்பட்ட உபாலி தென்னக்கோனும், அவரது மனைவியும் இவரை அடையாளம் காட்டியிருந்தனர்.
லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில், தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரேம் ஆனந்த உடலகமவை 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் மூன்று பேரின் சரீரப் பிணையிலும் செல்ல கடுவெல நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
எனினும், அவர் சார்பில் பிணையாளிகள் முன்னிலையாகாததால், மீண்டும் நேற்று சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.