பல்கலைக்கழக மோதல்களில் சம்பந்தப்பட்ட 7 மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர் வரவேற்பின் போது இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக ஏழு மாணவர்களுக்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
கடந்த 16ஆம் நாள் நடந்த இந்த மோதல்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மாணவர்களுக்கே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, யாழ். மாவட்ட நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலேயே ஏழு மாணவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ். மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதீஸ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மோதல்கள் தொடர்பாக, ஏற்கனவே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் திலைவர் சிசிதரன் யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் தாமாகவே முன்வந்து, முன்னிலையாகியிருந்தார். இதையடுத்து அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.